ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 103 பேர் பலியாகினர். 211 பேர் படுகாயம் அடைந்தனர்.
நான்காண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் துணை ராணுவ படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. அப்போது அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் 103 பேர் உயிரிழந்தனர். 211 பேர் காயம் அடைந்தனர். ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடி படை பிரிவு தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க படையால் கடந்த 2020 ஜனவரி மாதம் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இவரது நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கெர்மானில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அப்பொழுது 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுகள் பையில் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.














