ஈரானின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் உள்ள பெரிய மாகாணம் சிஸ்டன் - பலுசிஸ்தான். இங்கு சார்பாஸ் ஷாஹ் பஹர், ராஸ்க் போன்ற நகரங்களில் உள்ள ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஒரே சமயத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பணைய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். என்றபோதிலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த இந்த மோதலில் 28 பேர் பலியான சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.