இந்தியன் ரயில்வே, ரயில்களில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. “டிராவல் நவ் பே லேட்டர்” (Travel Now Pay Later) என்று இந்த திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, இந்தியன் ரயில்வே, CASHe நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை CASHe நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக, இந்தியாவில், ரயிலில் பயணம் செய்வதற்கு, ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது, பயண கட்டணத்தை இணையவழி பண பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். இந்நிலையில், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டும், கட்டணத்தை தாமதமாக செலுத்தும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்படும் டிராவல் நவ் பே லேட்டர் திட்டத்தின் படி, பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் முன்பதிவு செய்து பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். CASHe நிறுவனம், பயணியின் சார்பில் முழு பயண கட்டணத்தை செலுத்தி விடும். பிறகு, பயணி, பயண கட்டணத்தை CASHe நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். தவணை முறையில் கட்டணத்தை செலுத்தும் வசதியையும் CASHe நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்தியாவில், ஐஆர்சிடிசி தளம் மூலம், ஒரு நாளைக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. இதனால், இந்தியன் ரயில்வேயின் இந்த புதிய கட்டண முறை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், ரயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.