டிசம்பர் 31 அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் முக்கியமான தட்கல் முன்பதிவு நேரத்தில், ஐ ஆர் சி டி சி இணையதளம் திடீரென செயலிழந்தது. இது டிசம்பர் மாதத்தில் மூன்றாவது முறையாக நிகழ்ந்த செயலிழப்பு ஆகும். இந்த செயலிழப்பால் லட்சக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டவுன்டிடெக்டர் இணையதளத்தின் தரவுகளின்படி, காலை 10:12 மணிக்குள் சுமார் 1502 பயனர்கள் இணையதளத்தை அணுக முடியாமல் இருந்ததாக புகாரளித்துள்ளனர்.
இந்த செயலிழப்பிற்கு IRCTC நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் இணையதள சேவை மீட்கப்படும் எனவும் தெரிவித்தது. ஆனால், சமூக வலைதளங்களில் பயனர்கள் IRCTC-யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தட்கல் முன்பதிவு செய்யும் போது ஏற்படும் தொடர்ச்சியான சிக்கல்கள், இணையதளத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட செயலிழப்பிற்கு பிறகு மீண்டும் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்பது, அதிக தேவையுள்ள முன்பதிவு சேவைகளை நிர்வகிப்பதில் IRCTC-க்கு சவால் இருப்பதை காட்டுகிறது.