ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவரின் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்ரீநகரில் உள்ள கர்பாலி மொஹல்லா பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் உசைர் அசார் பட் என்பவரின் வீட்டில் 'ரெய்டு' நடந்தது. அப்போது, அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து உயர் மட்ட விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2021ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்த கேரளாவைச் சேர்ந்த முகமது அமீன் மீது, என்.ஐ.ஏ., விசாரணை நடத்தியதில், இவருக்கும், உசைர் அசார் பட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக இருவரும் ஜம்மு - காஷ்மீருக்கு குடியேற திட்டமிட்டு இருந்தனர் என்று அவர் கூறினார்.