தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - இசைத் தூண்கள்
ஒலியை உருவாக்கும் அடிப்படை இயற்பியலை வைத்துதான் இசைக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இசைக் கருவிகளில், காற்று உள்ளே செல்லுமாறும், வெற்றிடம் இருக்கும் வகையிலும் விஞ்ஞானப் பூர்வமாக சரியாக அமைத்தால் மட்டுமே இனிமையான இசை வெளிப்படும். ஆனால், வெற்றிடம் இல்லாத, காற்று உள்ளே புக முடியாத கல் தூண்கள் மற்றும் வட்டக்கல் ஆகியவற்றில் இசை வெளிப்படுவது ஓர் அதிசயமாகும். பண்டையக் கோவில்களில், வெறும் கற்களைக் கொண்டு இசையெழுப்பும் அதிசயத் தூண்கள் காணக்கிடைக்கின்றன. உலகில் வேறெங்கும் இல்லாத தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.
கோவிலில் உள்ளத் தூண்களை இசை எழுப்பும் வண்ணம் அமைப்பது தமிழர்களின் நுட்பமானக் கட்டிடக் கலைப் பரிமாணங்களில் ஒன்றாகும். நாயக்கர்கள் காலத்திற்குப் பின்னரே இசைத் தூண்கள் என்ற அமைப்பு தமிழகக் கோவில்களில் ஆரம்பமாகியுள்ளது. பொதுவாக, இசைத் தூண்கள் மூன்று முதல் ஆறு அல்லது ஏழு அடிகள் வரை உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இதன் உருவாக்கத்தில் இசைக் கலைஞர்களின் பங்கும் உண்டு. தூண்கள் செதுக்கப்படும் போதே "ச ரி க ம ப த நி” என்ற ஏழு விதமான இசையை எழுப்பப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
முற்காலத்தில் இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்துள்ளனர். இசைத்தூண்கள், நடுவில் ஒரு கனமான தூணையும் அதைச் சுற்றிலும் அமைந்த விட்டம் குறைந்த பல தூண்களையும் கொண்டவையாக உள்ளன. பெரும்பாலும் இவை அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டவையாக இருக்கின்றன. நடுவில் உள்ள தூண் கட்டிடக் கூரையின் சுமையைத் தாங்குமாறும் அதைச் சுற்றியுள்ள வெளித் தூண்கள் இசை எழுப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், இசைத் தூண்கள் இசை எழுப்பும் போது அருகில் உள்ள மற்றத் தூண்களும் சேர்ந்து ஒத்திசைவாக இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இசைத் தூண்களில் இசை எழுப்பப்படும் முறையைக் கொண்டு அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, தாள இசைக் கருவிகளை அடிப்படையாகக் கொண்டு, தட்டும் போது இசை எழுப்புவனவாகும். இவ்வகைத் தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசை வெளிப்படுகிறது. இரண்டாவது, காற்று இசைக்கருவிகளின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட குழல் இசைத் தூண்கள் ஆகும். இவ்வகைத் தூண்கள், தூணில் அமைக்கப்படும் துளைகளினூடாக ஊதும்போது இசை எழுப்புவனவாகும். இவற்றிலிருந்து சங்கு, எக்காளம் ஆகிய கருவிகளின் ஒலியைப் பெற முடியும்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இசைத் தூண்களில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை ஆராய்ந்தனர். தூண்களின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் இந்தத் தூண்களில் இருந்து எழும் நுண்ணிய ஒலியைப் பதிவு செய்து அளவிடுவது ஆகியன அவர்களின் ஆராய்ச்சியாகும். புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆராய்ந்ததில் இந்தத் தூண்கள் தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் என்றும் தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் இவற்றில் சத்தம் உருவாகிறது என்றும் தெரிய வந்துள்ளது. வியக்கவைக்கும் இந்த நுட்பத்தைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அறிந்துள்ளது உலகத்தவர்களால் போற்றப்படுகிறது.
ஆலயங்களின் அதிசயமாகக் கொண்டாடப்படும் இத்தகைய இசைத் தூண்கள், மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராம நல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம், திருவானைக்கா, தாடிக்கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பெங்களூர், சாமராஜன் பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் உள்ளன. இவற்றுள் சில இசைத் தூண்களின் விபரங்கள் வருமாறு:
- மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. இங்குள்ள இசைத்தூண்கள் நடுவில் ஒரு தூணையும் அதைச் சுற்றிலும் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 22 தூண்களோடு கூடிய அமைப்புக் கொண்டவை. இந்தத் தூண்களைத் தட்டி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியும் எனச் சொல்லப்படுகின்றது.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபத்திலும், அம்பாள் சந்நிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இவையும் தாள இசைக்கருவிகளின் அடிப்படையில் உருவானத் தூண்களாகும்.
- ஆழ்வார் திருநகரி ஆதிபிரான் கோயிலில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று தட்டும்போது மூன்று சுரங்களை எழுப்பக்கூடிய இசைத்தூணாக அமைந்துள்ளது. மற்றொன்று ஊதி இசையெழுப்பும் தூணாகும். இத்தூணில் உள்ள இரண்டு துளைகளில் ஒன்று சங்கின் ஒலியையும், மற்றது எக்காள ஒலியையும் கொடுக்கின்றன.
- செண்பகராம நல்லூரில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள இசைத் தூண்கள் ஊதி இசை எழுப்பும் குழல் இசைத் தூண்களாகும். இதிலிருந்தும் சங்கு, எக்காளம் ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைப் பெறமுடிகிறது.
- சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் நான்கு இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் வடக்குப் பக்கத்தில் அமைந்த இரண்டு தூண்கள் ஒவ்வொன்றிலும், 24 சிறிய தூண்களும், தெற்குப் பக்கத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 33 சிறிய தூண்களும் உள்ளன. ஏழு சுரங்களையும் எழுப்பக் கூடியதாக இத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த தாடிக்கொம்பு சுந்தரராசப் பெருமாள் கோயிலில் விழாக்கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.
- மதுரை அழகர் கோயிலில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே நடுவில் ஒரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன. இவை தட்டும்போது ஒன்றிணைந்து ஒத்திசைவான இசையை எழுப்பக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ளன .
- ஆரல்வாய்மொழியில் உள்ள சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் தேவசகாயம் பிள்ளை மவுண்ட்டில், பெரியதொரு வட்டக்கல் உள்ளது. இந்த வட்டக்கல்லில் தட்டினால், மணி அடித்தது போல் ஒலி எழும்.
பரந்து விரிந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் இந்தத் தூண்கள் பெரும்பாலும் நிறுவப்பட்டுள்ளன. இன்றையத் தமிழகம் தவிர்த்து, கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் எண்ணற்ற இசைத் தூண்கள் உள்ளன. இன்னும் எத்தனைப் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், சிறப்பு வாய்ந்த இந்த இசைத் தூண்களை மறுபடியும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. இந்தத் தூண்கள் தமிழரின் திறனை என்றென்றும் இசைத்துக் கொண்டே இருக்கும்.