காசாவிற்குள் தரைவழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம் தற்போது காசாவை சுற்றி வளைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல். இந்த போரில் இதுவரை பலி எண்ணிக்கை 9000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காசா நகரம் முழுவதையும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை அழிப்பதே எங்கள் நோக்கம் என்று முன்னதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 335 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காசாவின் அல்குவாட் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ஜெனின் அகதிகள் முகாமிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் ராணுவ வீரர்களை கொன்று பைகளில் அனுப்புவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.