காசா வடக்கு பகுதியில் போர் செய்து வரும் இஸ்ரேல் ராணுவம் தற்போது தெற்கு காசாவிலும் நுழையும் என தகவல் வந்துள்ளது.கடந்த ஆறு வாரங்களாக காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதுவரை 12,000-க்கும் அதிகமானோர் இப்போரில் பலியாகி உள்ளனர். ஹமாஸ் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகளை முற்றுகையிட்டு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது. அந்த வகையில் அல்சிபா மருத்துவமனையை தங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.அடுத்ததாக இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது. அதில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய வசிப்பிடங்களில் பொதுமக்கள் காணப்பட்டாலோ இல்லை அவர்களுடன் இருந்தாலோ அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இஸ்ரேலிய ராணுவ மந்திரி தெற்கு காசாவில் ராணுவம் படையெடுக்கும் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். ஹமாஸ் படையினர் எங்கு இருந்தாலும் அவர்களை தாக்குவோம் என்று கூறியிருந்தார்.தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் அங்கு பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கினால் அங்கு மக்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.