அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அந்த நாடுகளில் இருக்கும் தனது தூதர்களை இஸ்ரேல் திருப்பி அழைத்துள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளின் முடிவை எதிர்த்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது. குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பிறகும், பாலஸ்தீனத்துக்கு இந்த நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. எனவே, நார்வே மற்றும் அயர்லாந்து நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் தூதர்கள் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படுகின்றனர். ஸ்பெயின் நாடும் அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளைப் போல பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பட்சத்தில், இதே நடவடிக்கை ஸ்பெயின் மீதும் மேற்கொள்ளப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.