செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹொடைடா துறைமுக நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடலில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்னரே, ஹொடைடா துறைமுகத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஹவுதிகளின் ராணுவ கட்டமைப்புகளை அழிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக, ஏமனின் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசியதில், 33 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தாக்குதல்கள் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.