கடந்த வியாழக்கிழமை, இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, 60 வயது பெண் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. மேலும், மேற்கு கரை பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க, இஸ்ரேல் ராணுவத்துக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதாக பாலஸ்தீனம் அறிவித்தது. எனவே, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா கவலைத் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதுவரையில், இஸ்ரேலின் தாக்குதலால் 29 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்க, அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள தனது ஆசிய பயணத்தில் இது தொடர்பாக ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த முறை, அமைதிப் பேச்சு வார்த்தை வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.