ரபா நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக தகவல் வந்துள்ளது.
ரபா நகரின் கிழக்கு பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் மேற்கு நோக்கி நகர்கின்றன. எனினும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இப்பகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ரபாவின் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் இஸ்ரேல் முன்னேறிய போது 4.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர் என்று ஐநா கூறியது.
இந்நிலையில் ரபாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் வாகனங்களை ஹமாஸ் வீரர்கள் தாக்கினர் என்று அந்த அமைப்பு நேற்று கூறியுள்ளது. அல்சலாம் பகுதியில் காயமுற்ற ராணுவ வீரர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் வந்ததாக கூறப்படுகிறது. ரபா நகரில் தெருக்கள் எல்லாம் விரிச்சோடி கிடக்கின்றன. அங்குள்ள குடும்பங்கள் நகரை விட்டு வெளியேறி வருவதால் இங்குள்ள மக்கள் தொடர்ந்து பசி மற்றும் பயத்தால் வாடி வருகின்றனர். எந்த இடமும் அவர்களுக்கு பாதுகாப்பாக தெரியவில்லை. உடனடியான போர் நிறுத்தம் மட்டுமே அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது என்று ஐநா சார்பாக பனி செய்யும் மீட்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.