காசாவில் நிவாரணப் பொருட்கள் வாங்க காத்திருந்த மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 104 பேர் பலியாகினர்.
இந்நிலையில், காசாவின் மேற்கு பகுதியில் நபுல்சி ரவுண்டா பவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வந்தது. அதனை வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அப்போது நிவாரண பொருட்களுடன் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. அப்போது மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் காயமடைந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தது. அதன் காரணமாக திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 104 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் இது குறித்து கூறுகையில், மக்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடந்து கொண்டனர். இதனால் எங்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தினோம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே காசா மருத்துவமனையில் உபகரணங்கள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பாலசீன சுகாதார அமைச்சகம் மற்றும் ஐநா சபையின் பொதுச் செயலர் அந்தோனியோ குடெரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.