இஸ்ரேலில் நேற்று பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் இஸ்ரேல் கடந்த ஆறு மாதங்களாக ஹமாசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்த போரில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணை கைதிகளை மீட்க வேண்டும் என்று இஸ்ரேலில் பொதுமக்கள் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெருசலம், சிசேரியா ரானானா, டெல் அவிவ், ஹேர்ஸ்லியா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பிணை கைதிகளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதோடு உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக சென்றனர். அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜெருசலேமில் பிரதமர் நேதன்யாகுவின் வீடு முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது பிணை கைதிகளை மீட்க தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டினர். சாலைகளில் பொருட்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். டெல் அவிவில் போராட்டம் இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. இதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறியுள்ளனர். இதற்கு இடையே எகிப்தில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்குகிறது.