ஹமாஸிடம் உள்ள பிணை கைதிகளை மீட்கவும் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதவி விலகவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின்போது முக்கிய சாலைகளில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு எதிரிலும் போராட்டம் செய்தனர். ஹமாசிடம் போரில் பலியான மக்களை நினைவுகூறும் வகையில் 1500 கருப்பு மற்றும் மஞ்சள் பலூன்களை பறக்கவிட்டனர்.
காசா போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். ஹமாசிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 120 பேர் இன்னும் அவர்களிடம் பிணை கைதிகளாக உள்ளனர். அவர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த போர் நீடித்தால் மேலும் பல பிணை கைதிகள் உயிரிழக்க கூடும் என்று கருதப்படுகிறது.














