அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காசா போருக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், போர் நிறுத்தம், ஆயுத விநியோகம், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்ப பெறுதல் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். காசாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மாணவர்கள் கண்டன பேரணி நடத்தினர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்த போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது, இந்த மாணவர் போராட்டம் மிகவும் பயங்கரமானது. யூத எதிர்ப்பு கும்பல் அமெரிக்காவின் முக்கிய பல்கலைக்கழகங்களை கைப்பற்றியுள்ளன. தற்போது நடைபெறும் பேரணி 1930-களில் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இதை பார்த்துக் கொண்டு இந்த உலகம் சும்மா இருக்காது என்றார்.