மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், முக்கிய பரிசோதனை ஒன்று, இந்திய கடற்படை மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இணைந்து செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது.
ககன்யான் திட்ட அமைப்பு படி, "சிறிய கேப்சூல் விண்கலம் மூலம், 3 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். மூன்று நாள் விண்வெளி பயணத்திற்கு பின்னர், விண்கலம் கடலில் தரையிறக்கப்படும். தரையிறங்கிய பின்னர் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை கடற் படையினர் மீட்பர்". இந்நிலையில், வீரர்களை மீட்பதற்கான பரிசோதனையில் கடற்படையினர் ஈடுபடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ககன்யான் திட்டத்தின் இறுதி நிலையாக விண்வெளி வீரர்களை கடலில் இருந்து மீட்கும் நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. குறைவான நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. முதற்கட்டமாக, துறைமுகம் போன்ற மூடப்பட்ட நீர்நிலைப் பகுதியிலும், அடுத்த கட்டமாக திறந்தவெளி கடல் பகுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பரிசோதனை மையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது.