சிங்கப்பூரின் 2 செயற்கைகோள்களுடன் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 55 ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. தற்போது, டெலியோஸ் 2, லூம்லைட் 4 ஆகிய 2 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களை, இஸ்ரோவின் என் எஸ் ஐ எல் பிரிவு, வணிக ரீதியாக விண்ணில் செலுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, சனிக்கிழமை மதியம் 2:19 மணி அளவில் பி எஸ் எல் வி சி 55 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 19 வது நிமிடத்தில், 2 செயற்கை கோள்களும் திட்டமிடப்பட்ட சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. டெலியோஸ் 2 - புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் எனவும், லூம் லைட் 4 - தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கடல் வழி போக்குவரத்துக்கு உதவும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இரு செயற்கை கோள்கள் தவிர, 4 ஆராய்ச்சி மையங்களுக்கு சொந்தமான 7 ஆய்வுக் கருவிகள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை, அடுத்த ஒரு மாதத்திற்கு பூமியை வலம் வந்து ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.