சூரியனை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ, ஆதித்யா எல் 1 என்ற பெயரில் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த உள்ளது. இது சூரியனின் மேற்பரப்பு, சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், சூரிய புயல்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான முக்கிய பாகம், இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் துணையுடன் இந்த பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசிபில் லைன் எமிஷன் கொரோனோகிராப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாகம், ஆதித்யா எல் 1 திட்டத்தின் முக்கிய ஏழு பாகங்களில் ஒன்றாகும். இது சூரியனில் ஏற்படும் புயல்கள், சூரிய காற்று, சூரிய காந்தப்புலம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல் 1 திட்டத்திற்கான 2 பாகங்கள், ஏற்கனவே இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதர பாகங்கள் இறுதி வடிவமைப்பு நிலையில் உள்ளதாகவும், விரைவில் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.