உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் பகுதி புதைந்து வரும் நிகழ்வு குறித்து, ராணுவம், காவல்துறை, பேரிடர் மீட்புக் குழு மற்றும் விஞ்ஞானிகளுடன் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார்.
இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜோஷிமத் பகுதியில் தீவிரமாக நிலம் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கார்ட்டோசாட் 2 எஸ் செயற்கைக்கோள் மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்த ஜோஷிமத் நகரம், ராணுவ ஹெலிகாப்டர் தளம், கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் குறைவான வேகத்தில் இந்தப் பகுதியில் நிலம் சரிந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தமாக 8.9 சென்டிமீட்டர் புதைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையில், வேகமான முறையில் நிலம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த 12 நாட்களில் 5.4 சென்டிமீட்டர் ஜோஷிமத் நகரம் பூமியில் புதைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜோஷிமத் -ஆலி சாலையும் முழுவதுமாக குலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.