மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டத்தில், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடு கொண்டு வருவது மற்றும் உயிர் காக்கும் அமைப்பு ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப அமைப்பு மிக முக்கியமாகும். இதனை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவிலேயே இதனை தயாரிக்க உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத், இன்று ககன்யான் திட்டத்திற்கான ECLSS அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். “இந்தியா, இதுவரையில் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் செயற்கைக்கோள் அனுப்புதல் போன்றவற்றில் மட்டுமே மிகுதியாக ஈடுபட்டு வந்தது. ஆனால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் போது தேவைப்படும் சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடு மற்றும் உயிர்காக்கும் அம்சம் ஆகியவற்றை வடிவமைத்தது இல்லை. இது குறித்த அறிவை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பினோம். ஆனால், யாரும் முன் வரவில்லை. தற்போது, நாட்டில் உள்ள தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, ககன்யான் திட்டத்திற்கான பாதுகாப்பு அம்சத்தை உள்நாட்டிலேயே உருவாக்க உள்ளோம்” என்று அவர் கூறினார்.