விண்வெளியில் ஏவப்பட்டுள்ள அதிக திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்துள்ளது. அந்தப் புகைப்படங்களை நாசா ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தப் புகைப்படங்கள், ஆர்பிட்டர், ரோவர் மற்றும் பிற தொலைநோக்கிகள் எடுத்த புகைப்படங்களை விட துல்லியமாக உள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், “சக்தி வாய்ந்த இந்த தொலைநோக்கியின் கண்கள் கொண்டு, செவ்வாய் கிரகத்தை கண்காணிக்கப் போகிறோம். அங்கு ஏற்படும் புழுதி புயல்கள், வானிலை முறைகள், பருவநிலை சுழற்சிகள் குறித்து அறிய, மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெப் தொலைநோக்கி மூலம் கிடைக்கப் போகின்றன. அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் இரண்டு புகைப்படங்களை நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் முதலாவது, செவ்வாயின் மேற்பரப்பு குறித்ததாகும். இரண்டாவது புகைப்படம், செவ்வாயில் இருந்து வெளிப்படும் ஒளியைக் காட்டுவது ஆகும். முதல் படத்தில், Huygens Crater, dark Volcanic Syrtis மற்றும் Hellas Basin போன்றவை துல்லியமாகத் தெரிகின்றன. வெப்ப இழப்பால் வெளிப்படும் ஒளி இரண்டாவது படத்தில் தெரிகிறது.
செவ்வாயின் கிழக்கு பகுதியை Near InfraRed Camera மூலம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இதனை ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ள நாசாவைச் சேர்ந்த ஜெரோனிமோ வில்லநோவா, ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி தொழில்நுட்பத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தை பற்றி அறிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பெரிதும் துணைபுரிவதாகக் கூறினார். மேலும், இந்தப் புகைப்படங்கள் மூலம், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் வலுவாக விரிவடையும் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.