நிலவில் முதன் முதலில் கால் பதிக்கும் அமெரிக்கர் அல்லாத நபராக ஜப்பானிய விண்வெளி வீரர் வரலாறு படைப்பார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவரோடு இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், “அமெரிக்காவின் எதிர்கால விண்வெளி திட்டங்களில் 2 ஜப்பானிய விண்வெளி வீரர்கள் இணைய உள்ளனர். அவர்களில் ஒருவர் நிலவில் கால் பதிக்கும் அமெரிக்கர்கள் இல்லாத முதல் நபர் என்ற வரலாற்றை படைக்க உள்ளார்” என்று தெரிவித்தார். நாசா ஏற்கனவே அறிவித்த ஆர்டெமிஸ் வீரர்கள் குறிப்பில் ஜப்பானிய வீரர் பற்றிய தகவல் இடம்பெறவில்லை. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.