தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்ததற்காக 500 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்துள்ளது.
தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து அந்த ஆண்டில் உத்தரவிட்டது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 14.51 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தொகையை தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி 2021 - 22ல் 1,251 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 1,000 கோடி ரூபாய் விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முதல் தவணையான 500 கோடி ரூபாய் 2022 நவம்பரில் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாவது தவணையான 500 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது.