வரும் மார்ச் 31ம் தேதி, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், இந்த தொடரின் நேரலை ஒளிபரப்புகளை, ஜியோ சினிமா தளத்தில், 4K ரிசல்யூஷனில் இலவசமாக பார்க்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம், ஐபிஎல் போட்டி தொடர்களை ஒளிபரப்பு செய்வதற்கான டிஜிட்டல் உரிமத்தை பெறுவதற்கான ஏலம் நடைபெற்றது. அதில், 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான உரிமத்தை, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த வயாகாம் 18 கைப்பற்றியது. அதை தொடர்ந்து, தற்போதைய அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ் உட்பட 12 மொழிகளில் ஐபிஎல் போட்டி தொடர்களை ஒளிபரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர, நொடிக்கு 50 ஃபிரேம் என்ற துல்லியத்தில், புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், 360 டிகிரி கேமரா, வர்ணனையாளர்களுடன் சேட் செய்யும் வசதி போன்ற பல அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக ஒளிபரப்பிய ஜியோ தளம், ஐபிஎல் தொடரையும் சிறப்புடன் ஒளிபரப்பும் என்று கருதப்படுகிறது.