ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் செல்போன் டவர்கள் மற்றும் பைபர் வயர்களை கையகப்படுத்த, ஜியோ நிறுவனம், 3720 கோடி ரூபாயை எஸ்பிஐ எஸ்க்ரோ கணக்கில் வைப்பு வைத்துள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (NCLT), ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை கையகப்படுத்த நவம்பர் மாதத்தில் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் தலைமையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. அதே வேளையில், அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சார்பில், ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இது கடனில் தத்தளிப்பதால், இதனை ஜியோ நிறுவனம் கையகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்திற்கு சொந்தமாக, இந்தியாவில் 43540 செல்போன் டவர்களும், 1.78 லட்சம் கிலோ மீட்டர் பைபர் வயர் இணைப்புகளும் உள்ளன.