ஜியோ திங்க்ஸ் ஸ்மார்ட் யுட்டிலிட்டி பிளாட்பார்ம் நிறுவனம் (ஜியோ) மற்றும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் (இஇஎஸ்எல்) ஆகியவை இணைந்து, பீகார் மாநிலத்தில் சுமார் 10 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்களை நிறுவ உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொதுத்துறை எரிசக்தி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தில் செயல்பட உள்ளன. ஜியோ நிறுவனம் இதற்கான தொழில்நுட்ப சேவைகளை வழங்க உள்ளது. ஜியோ பிளாட்பார்ம் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரண் தாமஸ், இந்த தகவலை வெளியிட்டு, ‘இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைக்கு இது மிகவும் துணை புரியும்’ என கூறியுள்ளார்.
ஒரு ஸ்மார்ட் மீட்டரை தயாரித்து நிறுவுவதற்கு மொத்தமாக 50 டாலர்கள் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில், மார்ச் 2025 க்குள் 25 கோடி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு 3.3 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது.