ராஜஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அக்ரோ பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 60% பங்குகளை ஜேகே குழுமத்தின் ஜேகே பெய்ண்ட்ஸ் அண்ட் கோட்டிங்ஸ் லிமிடெட் என்ற கிளை நிறுவனம் வாங்கி உள்ளது. சுமார் 153 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் மூலம், பெயிண்ட் வணிகத்தில் ஜேகே சிமெண்ட்ஸ் கால் பதித்துள்ளது. மேலும், மீதமுள்ள 40% பங்குகளும் அடுத்த ஓராண்டுக்குள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ரோ பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2 உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. வரும் 2024 ஆம் ஆண்டில், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், 60,000 கிலோ லிட்டர் பெயிண்ட் மற்றும் 6700 கிலோ லிட்டர் கட்டுமான ரசாயனங்கள் என்பதாக திறன் உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது. ஜேகே சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவகிருஷ்ணா சிங்கானியா, “எங்கள் நிறுவனம் பெயிண்ட் வர்த்தகத்தில் திட்டமிட்ட முறையில் செயல்பட உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிமெண்ட் மற்றும் பெயிண்ட் வர்த்தகத்தில் ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சி எட்டப்படும்” என்று கூறினார்.