விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளன. இதற்காக, இவ்வருட இறுதியில், நாசா மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து, பூமி குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளன. இந்த அறிவிப்பை இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் நிர்வாகி சேதுராமன் பஞ்சநாதன் இந்தியா வருகை தந்துள்ளார். அவரது வருகையின் போது இந்த திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
NASA ISRO Synthetic Aperture Radar Satellite என்ற இந்த திட்டம் நிசார் (NISAR) என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், பூமியில், மாறிவரும் பருவநிலை, இயற்கை பேரிடர்கள், கடல் மட்டம் உயர்வு, நிலத்தடி நீர் குறைதல், பல்லுயிர் கணக்கீடு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பூமியில் நிலம் சார்ந்த பகுதிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், இதைத் தொடர்ந்து வேளாண் துறை, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.