அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி கடந்த மாதம் திவாலானது. இந்நிலையில், வங்கியை ஜேபி மோர்கன் நிறுவனம் கையகப்படுத்தியது. அப்போது, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்களை அப்படியே பரிமாற்றம் செய்து கொண்டது. அவர்கள், ஜேபி மோர்கன் நிறுவனத்தின் பணியாளர்களாக பணி செய்ய தொடங்கினர். இந்நிலையில், நேற்று, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியைச் சேர்ந்த 85% அதாவது 7000 ஊழியர்களுக்கு தொடர்ந்து முழு நேரமாக பணி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், 1000 பேருக்கு தற்காலிகமாக கூட பணி செய்வதற்கு ஆணை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, “நாங்கள் மே 1ம் தேதி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்திய போது, அதன் பணியாளர்களை வைத்துக் கொள்வது குறித்து ஒரு மாதத்திற்குள் வெளிப்படையாக அறிவிப்போம் என்று கூறியிருந்தோம். அதன்படி, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஜேபி மோர்கன் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.