சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கோளை சுற்றி, புதிதாக 12 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, வியாழன் கோளை சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை, மொத்தமாக 92 ஆக பதிவாகியுள்ளது. அதனால், அதிக எண்ணிக்கையில் நிலவுகளை பெற்றுள்ள கிரகமாக வியாழன் மாறி உள்ளது.
முன்னதாக, சனி கிரகம் 83 நிலவுகளுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது, வியாழன் கோளுக்கு 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், வியாழன் முதலிடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிலவுகள் ஹவாய் மற்றும் சிலி நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகள் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த நிலவுகள் மற்றும் அதற்கான சுற்றுவட்ட பாதைகள் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகள், வியாழன் குறித்த ஆராய்ச்சியை மேலும் தீவிரப் படுத்த உணர்த்தியுள்ளது. அதை நோக்கி, வரும் ஏப்ரலில் ஐரோப்பாவின் ஜூஸ் விண்கலம் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த வருடம் நாசாவும் ஜூபிட்டர் ஆராய்ச்சியில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.