காப்பியம் என்பது ஓர் பேரிலக்கிய வகை ஆகும். சிறப்புமிக்க மனிதர்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன.
ஒரு மொழியில் திடீரென்று காப்பியம் போல ஒரு பேரிலக்கியம் தோன்ற முடியாது. முதலில் தனிப் பாடல்களாகவும், செய்யுள் தொகுப்புகளாகவும் பாடல்கள் இயற்றப்பட்டன. இவை மெல்ல மெல்ல வளர்ச்சிப் பெற்று, கதையைத் தொகுத்துக் கூறும் பாடல்கள் பிறந்தன. பின்னர் கற்பனை வளம் விரிவடைந்ததும், கதைகளைக் கற்பனை வளத்தோடு கூறும் பாடல்கள் இயற்றப்பட்டன. இவ்வாறு விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது. இவ்வாறு காப்பிய இலக்கியங்கள் தோன்றிய பிறகு, அவற்றுக்கான இலக்கண விதிகளும் தோன்றின. தண்டியலங்காரம் என்னும் நூல் காப்பியங்களின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுகின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.
அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். மேற்கூறிய நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் முழுமையான கதைநூல் சிறுகாப்பியமாகும். அவ்வகையில், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தினையும் ஐம்பெருங் காப்பியங்கள் என்றும் சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் ஆகிய ஐந்தினையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அறிஞர்கள் வழங்கினார்கள்.
காப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவது, காப்பியத்தின் முதல் சொல்லை பெருமைக்குரிய சொல்லாக அமைப்பது போன்ற மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. இயற்கையிறந்த நிகழ்வுகளும், எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. மேலும் வருணனைகளை அதிகமாக்கி நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடுவதும் காப்பியத்தின் மரபாகிப் போனது.
தமிழில் காப்பியப் படைப்பு இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தமிழில் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் “காப்பிய இலக்கியக் காலம்” என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள்.
இன்று வரையில் பல காப்பியங்கள் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தமிழ் மொழியின் வளத்தை மென்மேலும் உயர்த்துகின்றன. பல கலைகளைப் பற்றியும், மக்களின் அன்றாட வாழ்வியலைப் பற்றியும் விரிவான காலக்குறிப்புகள் காப்பியங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. மேலும் கதைகளின் வழியாகவும், கதைமாந்தர்களின் வழியாகவும் நல்ல கருத்துகளை விதைக்கும் சிறப்பை காப்பியங்கள் பெறுகின்றன. காப்பியங்கள் இயற்றும் புலவர்களை வள்ளல்கள் ஆதரித்து வந்தனர் என்ற தகவல்களும் காப்பியங்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் செய்திகளாகின்றன. எனவே ஒரு மனிதன் காப்பியத்தின் வாயிலாக கற்றுக்கொள்ள முடியாதது என்று இவ்வுலகில் ஒன்றுமே இல்லை எனலாம்.