உடலின் இயக்கத்திற்கு மூச்சுக் காற்று அவசியம். அது போலவே, உலகின் இயக்கத்திற்கு காற்று மிக முக்கியம். காற்றே ஓர் இடத்தின் வானிலை மற்றும் பருவநிலை மாற்றத்தை நிர்ணயிக்கிறது. இந்தக் காற்றைப் பற்றியத் தெளிவான அறிவு மற்றும் புரிதல் சங்க காலத் தமிழ் மக்களிடம் இருந்தது என்பதற்குப் பலச் சங்க இலக்கியப் பாடல்கள் சான்றாக உள்ளன.
பண்டையத் தமிழர்கள் காற்று எந்தத் திசையில் இருந்து வருகிறது என்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். ஆகவே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலிருந்து வீசும் காற்றிற்கு, முறையே ‘கொண்டல்’, ‘கோடை’, ‘வாடை’, ‘தென்றல்’ எனப் பெயரிட்டிருந்தனர். இவைத்தவிர, வளி என்பதைக் காற்றின் பொதுப் பெயராகவும், வாடைக் காற்றுக்கு ‘வாந்தை’, ‘ஊதை’ என்றும், மழையுடன் சேர்ந்து வீசும் காற்றுக்கு ‘கால்’ என்றும் பெயர் வைத்து, காற்றின் தன்மையைப் பிரித்து அறிந்துள்ளனர். காற்றின் போக்கினைத் தெளிவாக உணர்ந்திருந்தக் காரணத்தால் அக்காலத் தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர். கிழக்குத் திசைக் காற்று கடல் தொழில் செய்வதற்கு ஏற்றதல்ல என்பதும், இக்காலத்தில் கடலிலிருந்து கரையை நோக்கி, காற்று வீசுவதால், பாய்மரத்தின் உதவியால் படகைக் கடலுக்குள் செலுத்த முடியாது என்பதும் அவர்கள் அறிந்து வைத்த உண்மையாகும். “கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த” என்ற நற்றிணைப் பாடல் வரி இதை விளக்குகிறது.
மழைப் பொழிவில் காற்றின் பங்கு மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவக்காற்றுக் காலமே மழைப்பொழிவதற்குரியக் காலமாகும். பருவச் சுழற்சியின் காரணத்தாலும், தமிழகம் பூமியின் நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும், கார் காலத்தில் காற்று வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் வீசுகின்றது. இதை நன்குணர்ந்தப் பண்டைத்தமிழர்கள் இக்காலத்தில் மேகம் வலமாகச் சுற்றுவதை
“வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்”
என்றும், இந்தக் காலத்திலேயே தமிழகப் பகுதியில் அதிகமான மழைப் பொழியும் என்பதை
“கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு”
என்றும் கூறியுள்ளனர்.
காற்றிற்கு அசாதாரண வலிமை உண்டு என்பதனையும் தமிழர்கள் அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் காற்று பற்றியச் செய்திகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ள ப்யூபோர்ட் அளவையில் (Beaufort Scale) காற்றின் வலிமையைக் கண்டறியும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ப்யூபோர்ட் எண் 6 என்பது பெருங்கிளைகளைச் சலனமடையச் செய்யும் பலமான காற்றைக் குறிக்கும். இவ்வாறான ஆறாம் எண் காற்று, கடலில் பெரிய அலைகளையும், வெண் நுரை படலத்தையும், ஊதுதல் போன்ற ஓசையையும் உருவாக்கும் என்பது இன்றைய அறிவியலின் கோட்பாடு. இதே வகையானக் காற்றை ஔவையார்,
“பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்”
எனப் புறநானூற்றில் குறிப்பிடுகிறார். இதில் காற்றின் ஓசையைப் பற்றியத் தெளிவானக் குறிப்பு உள்ளது. மேலும், இவ்வகைப் பலமானக் காற்றினால் ஏற்படும் வெண் நுரைப் படலத்தை ‘வில்லால் அடிபட்ட பஞ்சு’ போல இருப்பதாக,
“வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனோடு நகாஅ ஊங்கே”
என்ற நற்றிணைப் பாடல் விளக்குகிறது. ப்யூபோர்ட் அளவையில் எட்டாம் எண் கொண்ட காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழும் என்பது கோட்பாடு. இதனைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்குகிறது. வெம்மையானப் பாலை நில சூறைக் காற்றானது வேகமாக வீசி மரக்கிளையுடன் பறக்கிறது; அவ்வாறு பரவி வரும் காற்று உலர்ந்து இருக்கும் வாகை நெற்றுகளைத் தாக்கி ஒலியைக் கிளர்ந்தெழச் செய்கிறது என்பதை,
“வெந்திறற் கடுவெளி பொங்காப் போந்தென
நெற்றுவீளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம்”
என்றப் பாடல் வரிகள் விளக்குகின்றன.
காற்று இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது; உயிர்கள் வாழ்கின்றன. ஆனால், பூமிக்கு மேலே உள்ள விண்வெளியில் காற்று மண்டலம் இல்லை, எனவே உயிர்கள் இல்லை என்பது விஞ்ஞானம் கூறும் உண்மை. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறிவியல் உண்மையைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். வெள்ளக்குடி நாகனார் என்றப் புறநானூற்றுப் புலவர், இக்கருத்தை "வளியிட வழங்கா வானம்" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் "வறி நிலை இல் காயம்" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் "வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்" என்றும் கூறுகின்றனர். திருவள்ளுவரும் இதே அறிவியல் கருத்தை, "வளி வழங்கு பூமி" என்று கூறுகிறார்.
காற்றைப் பற்றிய அறிவியல் சிந்தனைகளுக்கு தமிழர்களே முன்னோடி என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.