சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த முயற்சி எடுத்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான இன்று சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. அப்போது கேள்வி நேரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்திருப்பதாகவும், பாரம்பரிய விளையாட்டுகள் அடங்கிய கபடி மற்றும் சிலம்பம் போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார்.
மேலும், பாரம்பரிய மிக்க உலக கோப்பை கபடி போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.