மாமல்லபுரத்துக்கு ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருவதால் கதிர்வீச்சு தாக்கம் குறித்து கல்பாக்கம் அணுமின் தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்தது.
ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி வழங்கப்பட்டது. இதனால் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நாடு முழுவதும் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது. இதன்படி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீன, உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பிப். 1-ம் தேதி இவர்கள் மாமல்லபுரம் சுற்றுலா வருகின்றனர். இதையடுத்து கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து, கடற்கரை கோயில் உட்பட புராதன சின்னங்களின் வளாகத்தில் கதிர்வீச்சு உள்ளதா என நேற்று ஆய்வு செய்தனர். கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டுபிடிக்கும் ரேடார் கருவி மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.