ஒரு வளர்ந்த சமூகத்தில், ஆடல், பாடல் போன்ற கலைகள் வெறும் பொழுது போக்காக மட்டுமல்லாது அந்த சமூகத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றன. ஒரு இனத்தின் மரபியல் சார்ந்த பண்பாடுகள் இவ்வகைக் கலை அடையாளங்கள் மூலமாகவே வெளியுலகிற்கு தெரிய வருகின்றன. அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய கலை அடையாளம் ‘கரகாட்டம்’ என்ற நாட்டுப்புற நடனக்கலை ஆகும். இன்று வரையிலும், கரகாட்டம் இல்லாத விழாக்களைத் தமிழகத்தில் காண முடியாது. இவ்வாறு, தமிழர் பண்பாட்டில் பின்னிப் பிணைந்துள்ள கரகாட்டத்தின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. அதைப் பற்றியச் சிலத் தகவல்கள் இதோ:
விவசாயத்தை முக்கியத் தொழிலாகச் செய்து வந்த தமிழர்கள், பயிர் வளர்வதற்கு முக்கியக் காரணமான ‘மழை’ தவறாது பெய்ய விரும்பி, மழை தெய்வங்களை வணங்கி, தண்ணீர் நிரம்பியக் குடத்தைத் தலையில் ஏந்தி ஆடிப்பாடி வழிபடத் துவங்கினர். இதுவே கரகாட்டம் தோன்றியதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இன்றும் கிராமப் புறங்களில் “மாரி” என்ற மழைத் தெய்வமான மாரியம்மன் கோவில் விழாக்களில் கரகாட்டம் தவறாது இடம்பெறுகிறது. மேலும், கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்திருக்கிறது என்பதை இவ்விழாக்களில் இருந்து உணரலாம். கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் தொன்று தொட்டு இன்று வரை நீடித்து வருகிறது. எனவே, விதைகளைக் கரகத்தின் வழியாக வழிபடும் முறையே கரகாட்டம் என்ற நடனமாகப் பரிணமித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.
தமிழ் மொழியில், கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. அதை உறுதி செய்யும் விதத்தில், தொல்காப்பியத்தில் வரும் “நூலே கரகம் முக்கோல் மனையே” என்ற வரிகளும் “நீரற வறியாக் கரகத்து” என்ற புறநானூற்று வரிகளும் அடிப்பகுதி அகலமாயும் வாய்ப்பகுதி குவிந்தும் இருக்கின்ற கலத்தையே குறிக்கின்றன. எனவே, தலையில் கரகத்தைச் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்பட்டது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி, இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு கரகாட்டம் ஆடப்படுகிறது. இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை போன்ற இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருவகையான கரகாட்ட வகைகள் அறியப்படுகின்றன. தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்” என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்” என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், கரகத்தின் வடிவமைப்பைக் கொண்டு, மண்ணால் செய்யப்படும் கரகம் கொண்டு ஆடுவது ‘தோண்டிக்கரகம்’ என்றும், பித்தளையால் செய்யப்பட்ட கரகத்தைக் கொண்டு ஆடுவது ‘செம்புக்கரகம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
கரகாட்டம் பழங்காலத்தில் புகழ் பெற்று இருந்த “குடக்கூத்து” என்ற கலையின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலமளந்தோன் ஆடிய குடமும்” என்ற பாடல் வரிகள் குடக்கூத்து என்ற நடனக் கலையைப் பற்றியக் குறிப்பைத் தருகின்றன. மேலும், மாதவி ஆடிய பதினொரு ஆடல்களில் “குடக்கூத்து” என்ற ஆட்ட வகையும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை நடனம் இன்றைய கரகாட்டத்தின் முன்னோடி என்பதை இலக்கியங்களில் இருந்தும் பழங்காலச் சிற்பங்களில் இருந்தும் அறிய முடிகிறது. உதாரணமாக, “குடங்கள் எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே” என்று திருமால் குடக்கூத்து ஆடிய புராணக் கதை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக ஆலயங்களில் கிட்டத்தட்ட 36 சிற்பங்கள் குடக்கூத்து ஆடும் நிலையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்றைய கரகாட்டத்தின் ஆதி வடிவமாக அறியப்படுகின்றன.
குடக்கூத்து பற்றிய இலக்கியக் குறிப்புகள் மற்றும் சிற்பச் சான்றுகள் ஆகியவற்றை ஒப்பீட்டு முறையில் ஆய்வுகள் செய்ததில், இந்தக் கலைவடிவம் பிற்கால பல்லவர் மற்றும் முற்கால சோழர்கள் காலத்தில் செழித்து விளங்கியது அறியப்படுகிறது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட குடங்களை வைத்து ஆடும் முறையும், குடங்களை மேலே வீசி எரிந்து கைப்பற்றி ஆடும் முறையும் முற்காலத்தில் வழக்கத்தில் இருந்தது சிற்பங்கள் மூலம் உறுதியாகிறது. மேலும், இந்தக் கலையில் பெண்களை விட ஆண்கள் மிகுதியாகப் பங்கேற்றுள்ளதும் சிற்பங்கள் மூலம் தெரிய வருகின்றன. மேலும், முற்காலத்தில், கைகள், தோள்கள், கால்கள் என்று உடலின் பிற பகுதிகளிலும் குடத்தை வைத்து ஆடும் மரபு இருந்துள்ளது. காலப் பின்னணியில் இந்த முறைகள் மாறி, இன்று குடத்தை தலையில் வைத்து ஆடும் வழக்கம் மட்டும் எஞ்சியுள்ளது. அதுவே “கரகாட்டம்” ஆகும்.
இன்றைய சூழலில் இந்நடனத்தில், தலையில் கரகத்தை சமநிலை படுத்தி ஆடுவதோடு, புதுப்புது உத்தி முறைகளைப் பயன்படுத்தி ஆடி வருகின்றனர். வழக்கமான அடவுகளை ஆடுவது மட்டுமல்லாமல், கரகம் தலையில் சுமந்து இருக்கும் பொழுது சிறுசிறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டுவது இன்று வழக்கில் உள்ளது. உதாரணமாக, கண்களை கட்டிக் கொண்டு ஆடுவது, ஏணியில் ஏறுவது போன்ற பல்வேறு சாகசங்கள் இன்றைய கரகாட்டத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
ஆனால், ஒரு கலை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம் தேவை. கரகாட்டத்தை பொறுத்தமட்டில் இந்த ஆதரவு குறைந்தே இருப்பதால், இந்தக் கலை வடிவம் மாற்றுப் பாதையில் சென்று, தனது அடையாளத்தை இழந்து, அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும், இந்தக் கலையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் கலைஞர்களும் குறைந்து விட்டனர். அதோடு, அடுத்த தலைமுறையில் இந்தக் கலையின் அடையாளத்தைத் தாங்கிப் பிடிக்க எவரும் இல்லை. இந்த நிலை மாறி, மீண்டும் இந்தக் கலையின் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கலைஞர்களும் மக்களும் இருந்தால் மட்டுமே இன்னும் சில ஆண்டுகளுக்காவது இந்தக் கலையின் அடையாளத்தைப் பாதுகாத்து, நீட்டிக்க முடியும். இல்லையென்றால், கால ஓட்டத்தில் கரகாட்டமும் காணாமல் போகும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். கரகாட்டக் கலைஞர்களை ஊக்குவித்து, மேன்மையான இந்தக் கலையை மீட்டெடுப்போம்.