அரசு இணையதளங்கள் மற்றும் விளம்பரங்களில் கலைஞர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தடுத்திருக்கும் நிலையில், தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இச்செயல் உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் ஆகும்.
முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.