27 Apr 2022 தற்போது,சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் தொல்லியல் அலுவலர்கள் காவ்யா, அஜய் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பண்டைய கால பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.இதுவரை கீழடியில்,ஐந்து குழிகள் தோண்டப்பட்டதில் நீள் வடிவ தாயகட்டை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.இப்போழுது,புதிதாக தோண்டப்பட்ட குழியில் சரிந்த நிலையில் கூரை ஒடுகளும், ஐந்து சுடுமண் பானைகளும் கிடைத்துள்ளன.கீழடி அகழாய்வில் அதிகளவில் பெண்கள் அணியும் பச்சை நிற பாசி மணிகளும், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட வடிவ சில்லுகளும் அதிகளவில் கிடைத்து வருகின்றன. எனவே கீழடியில் பெரும்பான்மையான மக்கள் வசித்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது.அகரம், கொந்தைகையில் மார்ச் 30 முதல் தலா ஒரு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் வேளையில், கூடுதலாக ஒரு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.