அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறினார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஸ்டார்மரை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் நியமித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் பெயர் ஸ்டார்மர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியுள்ளது. ரிஷி சுனக் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து அவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டார்மர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாம் பாதுகாப்பற்ற உலக சூழலை எதிர்கொண்டுள்ளோம். இப்பொழுது மாற்றத்திற்கான பணி உடனடியாக தொடங்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் நாங்கள் இங்கிலாந்தை கட்டி எழுப்புவோம். மகிழ்ச்சியான தொடக்கத்தை அனைவரும் உணரலாம். புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். இந்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இனி உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் என்றார்.