ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டும் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அதிகமானோர் வெளியேறியதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கென்யாவில் பெய்து வரும் கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழிடத்தை விட்டு வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து உள்ளனர். தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், ராணுவத்தினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு கென்யாவில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கென்யாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.