துபாயைச் சேர்ந்த கேரள சிறுமி லீனா ரபிக், கண் நோய்களை 70% துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இதனை லிங்க்டுஇன் வாயிலாக அவர் அறிவித்துள்ளார். ஐபோன் துணையுடன் இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இதற்கு, “ஓக்லேர் ஐ ஸ்கேன்” என்று பெயரிட்டுள்ளார். இந்த செயலியை அவர் 10 வயதாக இருக்கும் போது உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்கஸ், மேலனோமா, கேட்ராக்ட் போன்ற பல கண் நோய்களை, கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த செயலி கண்டுபிடிக்கிறது. ஆறு மாத கால ஆய்வுகளில், ஸ்விஃப்ட் UI உதவியுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது, ஐபோன் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட கைபேசி மாடல்களில் இயங்கும் என தெரிவித்துள்ளார். இந்த செயலி செயல்படும் விதத்தை காணொளியாக அவர் வெளியிட்டுள்ளார். மேலும், ஆப்பிள் பிளே ஸ்டோரில் இது ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.