சிறப்புத் திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவனந்தபுரம் நீதிமன்றம், தன்யா மார்ட்டினின் திருமணத்தை காணொலி மூலம் நடத்த பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் வேறு சிலரும் இதே போல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள சில நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர்.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றங்கள் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால் சாட்சிகள் நேரடியாக பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் மேலும் குறிப்பிட்டு உள்ளனர்.














