இந்தியர்கள் அதிகமாக வாழும் கனடா நாட்டில், திங்கட்கிழமை அன்று, தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, சுமார் 400 முதல் 500 பேர் வன்முறையில் ஈடப்பட்டனர். இது குறித்து கனடா நாட்டின் உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்களும், இந்திய ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் காணொளி காட்சி கனடா ஊடகத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியில், ஒரு தரப்பினர் இந்திய தேசிய கொடியையும், மற்றொரு தரப்பினர் காலிஸ்தான் ஆதரவு கொடிகள் மற்றும் பதாகைகளைத் தாங்கிய படியும் உள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை காவல்துறையினர் விலக்குவதாக அந்த காணொளி அமைந்துள்ளது. இதுகுறித்து கனடா நாட்டு காவல்துறையினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளூர் சாலைகளில் சண்டையிடுவதாக திங்கட்கிழமை இரவு தகவல் வந்தது. Goreway மற்றும் Etude பகுதிகளில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த பொழுது, 400 முதல் 500 பேர் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு நபர் படுகாயம் அடைந்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, காலிஸ்தான் குறித்த செயல்பாடுகளில் கனடா ஈடுபடுவதை இந்தியா தவிர்க்கக் கோரி இருந்தது. இது இந்தியாவில் வன்முறையை விதைப்பதாக அமையும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அறிந்தாம் பக்ஷி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது தொடர்பாக கனடா அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.