இந்த வாரத்தின் தொடக்கத்தில், கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்திய குடும்பம் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. தற்போது, கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று உறுதியாகி உள்ளது. பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட 36 வயதான ஜஸ்தீப் சிங் மற்றும் அவரது 27 வயது மனைவி ஜஸ்லின் கவுர், அவர்களது எட்டு மாத பெண் குழந்தை ஆரோஹி தேரி மற்றும் அவர்களுடன் வசித்து வந்த 39 வயதான உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடல் கிராமப்புறத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி Vern Warnke இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அவர், “கடத்தப்பட்ட குடும்பம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் அஞ்சினோம். துரதிர்ஷ்டவசமாக அது போலவே நடந்து விட்டது” என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்யும் படி என்ன காரணம் ஏற்பட்டது என்று வியப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருவதாகக் கூறினார்.
முன்னதாக, அமந்தீப் சிங்கின் வாகனம், தொலைவான கிராமப்புறத்தில் தீப்பற்றி எரிவதை கலிபோர்னியா தீயணைப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகே, அவர்கள் பற்றிய கடத்தல் செய்தி வெளிவந்தது. அத்துடன், கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் ஏடிஎம் கார்டு அண்மையில் அருகில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜஸ்தீப் தனது குழந்தையை கையில் சுமந்தபடி வாகனத்தில் ஏறி, வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இவை அனைத்தையும் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜீசஸ் மானுவேல் சல்கடோ என்ற 48 வயது நபர், இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்துவிட்டு தடத்தை அழிக்க முயற்சி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்துடன், அவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.