கம்போடியாவின் தற்போதைய அரசர் நொரோடம் சிஹாமொனி, முதல் முறையாக இந்தியா வருகை தர உள்ளார். வரும் மே 29 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை இந்தியாவில் அவர் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மே 30ஆம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு மற்றும் விருந்து அளிக்கப்படும். இந்த பயணத்தில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் அவரை சந்திக்க உள்ளனர்.
கடந்த 1963 ஆம் ஆண்டு, அப்போதைய கம்போடிய அரசர் நொரோடம் சிஹாநாக் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பின்னர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கழித்து, அவரது மகனும் தற்போதைய அரசருமான நொரோடம் சிஹாமொனி இந்தியா வர உள்ளார். இதன் மூலம், நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் கம்போடியா இடையிலான உறவில் மறுமலர்ச்சி ஏற்பட உள்ளது. மேலும், மன்னரின் இந்த வருகையால், இந்தியா கம்போடியா இடையிலான உறவு மிகவும் வலுவடையும் என கூறப்பட்டுள்ளது.