மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037ஆவது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இந்த விழாவில் பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான பேராபிஷேகமும் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு இன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.