தமிழர்களின் அழகான அடையாளங்களில் ஒன்று கோலம் ஆகும். இது தமிழர்களின் வாழ்வோடுப் பின்னிப் பிணைந்திருப்பதோடு பண்பாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தமிழக வீடுகள் என்றவுடன் வாசலில் இருக்கும் கோலங்களே நினைவிற்கு வருவதாகப் பல வெளிநாட்டவர் கூறும் அளவிற்கு, கோலங்கள் நம் வாழ்வை ஆக்ரமித்து இருக்கின்றன.
இன்றையக் கோலங்களின் தொடக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. பழங்கால மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிக்காட்டக் குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள். இந்தக் குறியீடுகளே பிற்காலத்தில் எழுத்துக்களாக வளர்ச்சி அடைந்தன. இவ்வாறு மனதில் எண்ணியதைக் குறிக்க எழுத்துகள் பிறந்ததும், குறியீட்டு ஓவியங்களில் 'தகவல் பரிமாற்றம்' வீழ்ச்சி அடைந்து, 'அழகியல்' என்றக் கலை வடிவம் முக்கியம் அடைந்தது. அதுவே கோலங்களாக மாறியது என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்து.
சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப்பட்டக் குறியீடுகள் தமிழகத்தில் கிடைத்துள்ள குறியீடுகளோடு மிகவும் ஒத்துப் போகின்றன. சிந்து சமவெளியில் ‘வீடு’ அல்லது ‘மனை’ என்பதைக் குறிக்க 'இரட்டைக் கோடுகள்' (ll) குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், இன்றும் இதே குறியீட்டைக் கோலத்தின் மூலம் பின்பற்றி வருகிறோம் என்பதுதான். இன்று நாம் வீட்டு வாசலில் என்னதான் பெரியக் கோலங்கள் வரைந்தாலும் வாசலின் ஓரங்களில் இரட்டைக் கோடுகள்தான் வரையப் படுகின்றன. இன்றளவிலும் இந்தக் கோடுகள் வரைவதுக் கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது கோலங்கள் கற்கால மனிதர்களின் குறியீடுகளில் இருந்து பிறந்தவை என்பது தெளிவாகிறது. .
தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் பலக் குறியீடுகள் கிடைத்துள்ள. அவைப் பெரும்பாலும் அளவீட்டு வரைவு வடிவங்களாக (Geometric designs) இருக்கின்றன. கோலங்களும் இப்போது வரையில் இதே அமைப்பில் தான் வரையப் படுகின்றன. ஒவ்வொரு கோலமும் சில கணக்குகளின் படியே வரையப்படுகிறது. மேலும் ஒரு கணிதவியல் வடிவத்தை ஒத்திருக்கிறது. தமிழர்கள் புள்ளியிட்டு வரையும் வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். இந்தப் புள்ளிகளே வட இந்தியாவில் இருக்கும் ரங்கோலிக்கும் தென்னிந்தியாவின் கோலத்திற்கும் இடையில் உள்ள மிக முக்கியமான வேறுபாடாகும். புள்ளியிட்டு வரையும் கணிதவியல் முறை மிகப் பழமையான காலந்தொட்டே இருந்து வருகிறது. தமிழர்கள் தங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்திய ஓவியங்களில் 'புள்ளியிட்டுக் கொள்ளுதல்' என்பது வழக்கமாகக் காணப்படும் முறை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் கோலங்கள் குறியீடுகளின் பரிணாம வளர்ச்சி என்பதை உறுதிப் படுத்துகிறது.
கோலங்கள் என்பன பழங்காலத்து 'தகவல் பரிமாற்ற முறை' என்பதை உறுதிப் படுத்தும் விதமாகத் தான் இன்றும் வாசலில் கோலங்கள் வரையப் படுகின்றன. விழாக்கள் என்றால் பெரியக் கோலங்கள்; வழிபாடு என்றால் சிறியவகை வண்ணக் கோலங்கள்; தேர்த் திருவிழா என்றால் தேர் போன்ற கோலங்கள்; தீபத் திருவிழாவில் தீபங்கள் உள்ள கோலங்கள்; பொங்கல் விழா என்றால் சூரியன், பொங்கல் பானை, கரும்பு, நெல் போன்ற ஓவியங்கள் என வரையப்படுகின்றன. இன்றும், ஒரு வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருக்கிறது என்ற செய்தியினை வீட்டு வாசலில் கோலம் வரையவில்லை என்பதை வைத்துதான் உறுதி செய்கிறார்கள். மேலும், வீட்டிலுள்ளோர் அம்மைநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரவில் வீட்டு வாசலில் கரியால் சிறு கோலம் வரைவது பலக் கிராமங்களில் வழக்கமாக இருந்து வருகிறது.
“வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல்“
என்ற நாச்சியார் திருமொழிப் பாடலும்
“தலைமெழுகு கோலமிடு முறை பெறவே
கணபதிவை அம்மே“
என்றத் திருக்குற்றாலக்குறவஞ்சிப் பாடலும் சங்ககாலத்தில் உள்ளக் கோலங்களின் வரலாற்றைப் பறை சாற்றுகின்றன. மேலும், அரிசி மாவில் கோலம் வரைவது சிற்சில உயிரினங்களுக்கு உணவாகிறது. இதில் உள்ள தமிழரின் ஈகைக் குணத்தையும் பலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விருந்தினர்களை வரவேற்கும் விதமாக வீடுகளில் கோலங்கள் வரையப்படுவதையும், கோலங்கள் இல்லாத வீட்டிற்கு விருந்தினர்கள் செல்லத் தயங்குவதையும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.
கோலமிடுதலில் உள்ள அறிவியலையும் இன்றைய நவீன மருத்துவம் எடுத்துரைக்கிறது. அதிகாலையில் கோலம் போடுவதால் நல்லதொரு உடற் பயிற்சியை, ஒரு யோகசனத்தைச் செய்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மனதை ஒருநிலைப் படுத்தி, சிந்தனைச் சிதறல்களைக் குறைக்கும் ஒரு பயிற்சியாகவும் கோலமிடுவது பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, கோலங்கள் தமிழினத்தின் பழமையைப் பகரும்; பண்பாட்டைச் சொல்லும்; உயிரினங்களுக்கு உணவளிக்கும்; உடற்பயிற்சியினை நல்கும்; விழாக்களை எடுத்துரைக்கும்; மகிழ்ச்சியினைப் பரிமாறும்; மரணத்தை அறிவிக்கும் மற்றும் வாழ்வியலைக் கூறும் ஒரு சிறந்த அடையாளமாகும். கற்காலம் முதலே நம்மோடு பயணித்து வந்தக் கோலங்கள் இனியும் பல ஆண்டுகள் நம்மோடு தொடர்ந்து வரும். நம் வீட்டு வாசல்களில், கம்பீரமாய் சிரித்து நிற்கின்றக் கோலங்களே இதற்குச் சாட்சி.