ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை எத்தனை விதமாகச் சொன்னாலும், நடனத்தின் மூலமாகச் சொல்லும் போது அழகு மென்மேலும் அதிகரிக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் அழகிய நடனக் கலை “கோலாட்டம்” ஆகும். கோல்களைக் கையில் பிடித்து ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ ஒருங்கிணைந்தோ அடித்து ஆடும் ஆட்டம் கோலாட்டம் எனப்படும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது. முக்கியமாக, குஜராத் மாநிலத்தின் தாண்டியா நடனம் கோலாட்டத்தை மிகவும் ஒத்திருக்கிறது. புராணக் கதைகள், சமுதாய நிகழ்வுகள் மற்றும் தலைவர்களின் சிறப்புகள் ஆகிய பொருள்களில் கோலாட்டப் பாடல்கள் எழுதப்படுகின்றன. சிறிய அளவிலானக் கோல்களைக் கொண்டு ஆடுவதால் இதனைக் குறுந்தடி சிலம்பு என்றும் அழைக்கின்றனர்.
குமரி மாவட்டப் பகுதிகளில் களியல் அல்லது களியலாட்டம் எனவும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கிட்டியடித்தல் அல்லது கிட்டியாட்டம் எனவும், ஆண்கள் ஆடும் ஆட்டம் வைந்தானை ஆட்டம் எனவும், திருச்சி மாவட்டப் பகுதிகளிலும் இலங்கையிலும் வசந்தன் கூத்து எனவும் கோலாட்டம் அறியப்படுகிறது. மேலும் இந்த வகை நடனமானது கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையாக அறியப்படுகிறது. கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடுவது கோலாட்டம் என்ற முதல் வகை. இரண்டாவதான பின்னல் கோலாட்டத்தில், கோல்களால் அடித்து ஆடிக் கொண்டே துணிகளில் பின்னல்களைப் போடுவதும் அவிழ்ப்பதும் நிகழ்த்தப்படும். மூன்றாவதாக, கோல்களாலும் கைகளாலும் அடித்து ஆடுவது கோலாட்டக் கும்மி எனப்படுகிறது. கோலாட்டக் கும்மி தென் தமிழகத்திலும், பின்னல் கோலாட்டம் என்ற கயிற்றுப் பின்னலாட்டம் வட தமிழகத்திலும் பரவலாக ஆடப்பட்டு வருகிறது.
தென் தமிழகத்தின் தொல்குடிகளுள் முதன்மையானவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழும் காணிக்காரர்கள் ஆவர். கோலாட்டம் அந்த இனத்தவரின் சிறப்பு வாய்ந்த ஆட்டக் கலையாக இருக்கிறது. கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளைக் கோலாட்டத்துக்குரியக் கழியாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, மலைகளின் சிறப்பு, இயற்கை, விலங்குகள் மற்றும் அவர்களின் குல தெய்வங்கள் ஆகியனப் பாடப்படுகின்றன.
பெண்கள் மட்டுமே ஆடும் ‘பின்னல் கோலாட்டம்’, ராஜஸ்தானில் கர்பா நடனம் என்றும் ஆந்திராவில் ஜடைக் கோலாட்டம் என்றும் வெவ்வேறு பெயர்களில், சிறிய மாற்றங்களுடன் அறியப்படுகிறது. இந்த வகைக் கோலாட்டம் சாதாரணக் கோலாட்டத்தில் இருந்து மாறுபட்டது. கூரை உள்ள அரங்கில் மட்டுமே இந்த வகைக் கோலாட்டம் நிகழ்த்தப்படும். மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளிவிட்டு, கூரையில் வண்ணத் துணிகளைக் கட்டியிருப்பார்கள். கூரையில் கட்டப்பட்ட வண்ண துணிப்பட்டையின் ஒரு பகுதி கோலாட்டம் அடிக்கும் பெண்ணின் கையில் இருக்கும். இந்தப் பின்னல் கோலாட்ட நடனம் பாம்பு பின்னல், பைப்பின்னல், தாம்புக் கயிறு பின்னல், சங்கிலிப்பின்னல் எனப் பல வகைகளில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை நன்றாகப் பயிற்சிப் பெற்றப் பெண்களால் மட்டுமே ஆட முடியும். ஆடிக்கொண்டே துணியில் பின்னல் போடுவதும், பின்னர் அவற்றை ஆடிக்கொண்டே சிக்கல் இல்லாமல் அவிழ்ப்பதும்தான் இந்த ஆட்டத்தின் சிறப்பாகும். குழுவாக ஆடும் இந்த ஆட்டத்தில் யாரேனும் ஒருவர் தவறாக ஆடினாலும் பின்னலைச் சிக்கலின்றி அவிழ்க்கமுடியாது.
தமிழகக் கிராமங்களில், நாட்டார் தெய்வங்களின் திருவிழா சமயங்களில் "கோலாட்டக் கும்மி" நிச்சயமாக இடம்பெறும். நாட்டார் தெய்வங்களின் கதை மற்றும் அருட்சிறப்பு கோலாட்டப் பாடல் வழியாகக் கூறப்படும். நடுவில் விளக்கு அல்லது முளைப்பாரியை வைத்து, பெண்கள் வட்டமாகச் சுற்றி நின்று, கோல்களைக் கொண்டும் கைகளைக் கொண்டும் அடித்து ஆடுவர். இந்த மரபு இன்று வரையிலும் தொடரப்பட்டு வருகிறது.
அறிவியல் ரீதியாக, கோலாட்டம் ஒரு விளையாட்டுமுறைக் கல்வியாகும். இது உடற்பயிற்சியையும் மனப் பயிற்சியையும் கலந்து வழங்கும் அற்புதமானக் கலையாகும். மேலும், பலரால் ஒரே சமயத்தில் ஆடப்படும் கோலாட்டம், கூட்டு மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறது. நம் வாழ்வில் ஏற்படும் எல்லாப் பின்னல்களையும் அவைப் பின்னப்பட்ட விதத்தைத் தெரிந்து அதை விடுவித்தால், வாழ்வியல் முடிச்சுகளையும் அவிழ்க்க முடியும் என்ற அனுபவப் பாடத்தையும் மிக எளிதாகப் பின்னல் கோலாட்டம் போதிக்கிறது.
தற்காலத்தில் பெரும்பாலும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரி சமயங்களில் கோலாட்டம் ஆடப்படுகிறது. மேலும், இது நாட்டுப்புறக் கலை வடிவத்தைச் சேர்ந்தது என்பதால் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியன நடத்தும் அரசு நிகழ்வுகளிலும் அரசுத் துறைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகளிலும் கோலாட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தமிழர்களின் தனிச்சிறப்பாகக் கருதப்படும் இந்தக் கலையை ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும்.