தமிழகத்தின் தொன்மையானக் கலைகளுள் “கும்மி” எனப்படும் கும்மியாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கைகளின் ஓசையை மட்டுமே இசையாகக் கொண்டு உருவான ஒருவகை நடனக்கலையே கும்மியாகும். எனவே, இது இசைக் கருவிகள் தோன்றும் காலத்திற்கு முன்னரே உருவான கலையாக அறியப்படுகிறது. ஆதிமனிதன் உழவையும் தொழிலையும் தொடங்கிய காலத்தில் கும்மி ஆட்டம் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தன் உழைப்பின் களைப்பு தீரவும் தொழில் மற்றும் பிற கருத்துகளை எடுத்துக் கூறவும் கும்மி தோன்றியிருக்கலாம் என்பதற்குச் சான்றாக இன்றளவிலும் உழைக்கும் மக்களின் கலையாக கும்மி இருந்து வருகிறது.
தமிழகத்தில் பரவலாக அறியப்படும் இந்தக் கலை கேரளத்தில் ‘கைக்கொட்டிக்களி’ மற்றும் ‘திருவாதிரைக்களி’ என்ற பெயர்களில் வழங்கி வருகிறது. கும்மி என்ற கலையின் தொன்மையை அது சங்க இலக்கியங்களில் சுட்டப்படுவதில் இருந்து அறியலாம். “குரவை ” என்ற ஆதி கலையின் பிரிவாக அறியப்படும் கும்மி என்ற கலை, “கொம்பை ” என்ற பெயரில் அகநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில்,
‘நோற்ற பெருமை யுடை யாருங்
கூற்றம் புறம்கொம்மை கொட்டினாரில்’
என்று வரும் இடத்தில் கொம்மை என்ற சொல் கைகளைக் குவித்து ஆடுதல்
என்ற பொருளில் வருகிறது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில்,
‘அங்கையந் தலத்தினா லப்பு தாதையெனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும்’
என்றும்
“குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ”
என்றும்
“கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்
குலத்தொடு முடியுமென்பார்”
என்றும் கொம்மை என்ற சொல்லால் கும்மி என்ற கலை கூறப்பட்டுள்ளது.
அதே போல, நைடத்தில்,
“கூற்றொடுங் கொம்மை கொட்டி குவிக்கும்”
என்று கூறும் இடத்தில் கொம்மை என்ற சொல் ‘கைகளைக் குவித்துக் கொட்டுதல்’ என்ற பொருளிலேயே வந்திருக்கின்றது. இவ்வாறு இலக்கியங்களில் பதிவான கொம்பை, கொம்மை எனத் திரிந்து, பிற்காலங்களில் கும்மி, கொம்மி என்று மருவி வந்திருக்கின்றது.
பொதுவாக கும்மியடித்தல் என்பது பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடனக்கலை போன்றே தோன்றினாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுவதுண்டு. குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடுவார்கள். அந்தப் பாடலின் மெட்டுக்கேற்ப, கைகளைத் தட்டி, தாளம் எழுப்பி, வட்டமிட்டு ஆடி வரும் வகையில் இன்று கும்மி பரவலாக அறியப்படுகிறது. மேலும், கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது. கும்மியடிக்கும் முறை பற்றி குறிப்பிடுகையில், மெல்ல நடந்து நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், தன் கையைக் கொட்டி அடித்தல், எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல் ஆகிய ஆறு நிலைகள் அறியப்படுகின்றன.
தமிழகக் கும்மிகளில், விரல் தட்டு, உள்ளங்கை தட்டு, அஞ்சலி தட்டு மற்றும் முழங்கை தட்டு போன்ற பல நடைமுறைகள் உண்டு. மேலும், கும்மிகளில் பூந்தட்டுக் கும்மி, தீப கும்மி, குலவை கும்மி, கதிர் கும்மி, முளைப்பாரி கும்மி போன்ற பலவகைகள் உண்டு. இன்று கும்மியின் பலவகைகள் மறைந்து விட்டாலும், தீப கும்மி, கதிர் கும்மி மற்றும் முளைப்பாரி கும்மி ஆகியவை திருவிழாக்களில் இன்றும் தென்படுகின்றன. சங்க இலக்கியத்தில் இந்தக் கலைப் பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், கும்மியின் போது பாடப்படும் பாடல் பற்றியக் குறிப்புகள் இல்லை. பல ஆண்டுகளாகக் கும்மி வாய்வழியாகவே வழங்கி வந்திருக்கிறது. பின்னர், நாளடைவில் வாய்மொழியாக இருந்து வந்த கும்மி பாடல்கள் இலக்கிய வடிவம் பெறத் துவங்கின. வள்ளியம்மன் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, பஞ்சபாண்டவர் கும்மி, வைகுந்தர் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபதேச கும்மி என்று பலவகை கும்மி இலக்கியங்கள் உருவாகின. மேலும், கும்மி பாடல்களுக்கென்று தனியாக வெண்பா முறையில் இலக்கணம் வகுக்கப்பட்டது. இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக் கும்மி என்று மூன்று வகையான பாவடிவம் கும்மியில் உண்டு.
இயற்கும்மி
ஓரடியில் ஏழு சீர்கள் அமைந்து, அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதப்படும் முறை
இயற்கும்மி ஆகும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெற்று, மூன்றாம் சீரும் ஏழாம் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப் பெறுவது இதன் சிறப்பாகும். அரிச்சந்திரக் கும்மி, ஞானக் கும்மி, வாலைக் கும்மி முதலிய கும்மி நூல்களில் இயற்கும்மிப் பாடல்களைப் படித்தறியலாம்.
ஒயிற் கும்மி
மூன்று அடிகள் கொண்டு, முதலடி இருவரிகளிலும், இரண்டாமடி இரு வரிகளிலும், மூன்றாமடி ஒரு வரியிலும் அமையும் வகையில் எழுதப்படுவது ஒயிற்கும்மி ஆகும். இரண்டாமடி முடுகியல் அடியாக வந்து, முதலடியும் மூன்றாமடியும் வெண்டளை அமையும் வகையில் அடிகள் தோறும் மோனை அமைத்து பாடுதல் இதன் தனிச் சிறப்பாகும். முருகர் ஒயிற்கும்மிப் பாடல் இந்த வகைக் கும்மிக்குச் சான்றாகும்.
ஓரடிக் கும்மி
கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க் கழிநெடிலடி கொண்ட ஒரே அடியில், முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ பெற்று, முழுப் பொருள் தரும் வகையில் இருப்பது ஓரடிக் கும்மி எனப்படும்.
பெரும்பான்மையாக தொழில்முறைக் கலைஞர்களல்லாத உழைக்கும் மக்களாலேயே கும்மி நிகழ்த்தப்படுவது இதன் எளிமையையும் பலதரப்பட்ட மக்களைச் சென்றடையும் தன்மையையும் அனைத்து மக்களுக்கும் கும்மி மீது இருக்கும் பரிச்சயம் பற்றியும் எடுத்துரைக்கிறது. மேலும், இதன் கருப்பொருளும் எளிய மக்களின் வாழ்வியல் முறைகளை விளக்குவதாக உள்ளது. அவை :
● வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கலைகள் நிகழ்த்தப்படுவதால் இறை உணர்வைத் தூண்டும் இதிகாச புராணக் கதைகளைப் பாடும் நோக்கில் உருப்பெற்ற கும்மிப்பாடல்கள். இவற்றை இன்றும் நாட்டார் கோவில் விழாக்களில் காணலாம்.
● நாட்டின் சீர்திருத்த முன்னேற்றத்திற்காக உருப்பெற்ற கும்மிப்பாடல்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பாடுபொருளில் பல பாடல்கள் இயற்றப்பட்டன. இவை எளிதாக மக்களைச்
சென்றடைந்ததால் மிகப்பெரும் பிரசாரமாகவும் இது இருந்தது. உதாரணமாக பாரதியார் கும்மி பற்றி தம் கவிதையில்,
“வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுவோர் கூட்டமுதப்பாட்டு”
என்று பெண்கள் வட்டமாக நின்று குனிந்து நிமிர்ந்தடிக்கும் கும்மியைக் குறிப்பிடுகின்றார். மேலும், தனது கருத்து பெரும்பான்மை மக்களை சென்றடையும் விதத்தில்
கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி!
என்று கும்மிப்பாடல் மூலமாக விடுதலை வேட்கைக்கான விதைகளை மக்கள் மனதில் விதைத்தார்.
● அரசர்கள், தலைவர்கள் தொடர்பான கதைகளே சமூகக் கதைகளாக உருப்பெறுகின்றன. இவ்வகையில் குறிப்பிட்ட தனிநபரின் சிறப்பினை உணர்த்தும் வகையில் உருப்பெற்ற கும்மிப் பாடல்கள். சிவகங்கையை ஆண்ட மன்னர்களின் கதைகள் கும்மி வடிவில் பாடப்பட்டுள்ளன.
● ஊர் மற்றும் நகரின் பெருமைகளை எடுத்துக் கூறும் போக்கில் உருப்பெற்ற கும்மிப் பாடல்கள். இவற்றை அந்தந்த ஊர்த் திருவிழாக்களில் காணலாம்.
இவ்வாறு, எளிய மக்களைச் சென்றடையும் கலையாக இருந்த கும்மியின் மூலம் பெரும் வரலாற்றுத் தொடர்ச்சியை அறிய முடியும். இந்தக் கலையின் எளிமையே இதன் பலம். அதனாலேயே அந்தந்த கிராமங்களின் கதைகள் கும்மியின் வாயிலாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்று கும்மி என்ற கலை உரிய கவனம் பெறாமல் அழியும் நிலையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த கும்மிப் பாடல்கள் சரியாகப் பதிவு செய்யப் படாததால் அழிந்து போயின. எனவே, இன்று எஞ்சியிருக்கும் சில கும்மிப் பாடல்களையாவது முறையாகப் பதிவு செய்து, பயின்று, கும்மியைப் போற்றுவோம்.