குவைத் நாட்டை பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினர்கள் தங்கி உள்ளனர். அவர்களது குடும்பத்தினர் பார்வையாளர் விசா மூலம் குவைத் நாட்டிற்கு சென்று வந்தனர். இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, குவைத் அரசு, பார்வையாளர் விசா நடைமுறைகளை கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது இந்த முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் விசாவுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குவைத் வெளியிட்டுள்ள புதிய விதிகளின் படி, 400 தினார்களுக்கு மேல் சம்பளம் பெறுபவரின் சொந்த குடும்பத்தினர் பார்வையாளர் விசா மூலம் குவைத் நாட்டுக்குள் நுழையலாம். நெருங்கிய உறவினர் தவிர பிறரை நாட்டுக்குள் அழைத்து வர வேண்டுபவர், 800 தினார்களுக்கு மேல் சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். பார்வையாளர் விசா எந்த வகையிலும் குடியிருப்பு விசாவாக மாற்றப்படாது. விசா முதிர்வடையும் நாளில் குறிப்பிட்ட நபர்கள் குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.